Saturday, July 5, 2008

நிழல்கள்

இணைக்க
ஓயாது வந்துபோகும்
இந்தக் கொடுங்கனவிலிருந்து
எப்படித் தப்புவது?

- இங்கே
நிழல்களின் நிலத்தில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
இங்கே அங்கேயென
ஏகப்பட்ட குரல்கள்
உருவமற்று.

என் குரலை மட்டும்
ஒருவரும் செவிமடுக்கவில்லை.
அந்தக் குரல்கள் மட்டும்
அத்தனை விளக்கமாய்
எனக்குக் கேட்கின்றன.
என் குரல் மட்டும் எவருக்கும்
எட்டவில்லையே !

பழகிய
அதன் பெயரையும் சொல்லித்தான்
ஓலமிட்டு அழைக்கிறேன்.

பிறகு -
நினைவுகளனைத்தும்
பின்னோக்கி நகர . . . நகர. .
மூளையின் பெருவலி
குரல்களின் சத்தத்தை
அதிகப்படுத்திக் கொண்டே
இருக்கிறது.

நிஜங்களைத் தொலைத்த
கொடுங்குரல்களின் ஊடாக
உண்மையைக் காண எங்கே போவேன்?
எப்படிக் காண்பேன்?

தேடித்தேடித் தீர்ந்த பின்னர்
இங்கே
மறுபடியும்
நிழல்களின் நிலத்தில்
நடந்து கொண்டிருக்கிறேன்
போகும் வழிதெரியாது.

அனைத்துக் குரல்களும்
ஆள் பிடிக்கும் ஆசையில்
தனித்தனியாய் அலைந்து கொண்டிருக்கின்றன
எந்த ஒரு பிடிப்புமின்றி.

- மகரந்தன்

No comments: