Monday, July 6, 2015

காற்றிழந்த காலம்

இணைக்க


காற்றிழந்த காலம்


ஒரு புத்தகத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்தது
வெடித்த பலூன் ஒன்று.
யார் வைத்திருப்பார்கள்?

அந்த பலூனின்
நகக் காலில் அச்சிடப்பட்டிருந்த
வாசகத்தைப்பார்த்தேன்
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்”
ஒரு வயது குழந்தைக்காகச்
சொல்லப்பட்டிருந்தது.

அந்தக் குழந்தை
நீண்ட காலத்திற்கு
குழந்தையாக இருக்க முடியாது.

அந்தக் குழந்தை
இப்போது தனது குழந்தைக்கு
ஒரு பலூனைப் பரிசளித்திருக்கலாம்
அது எந்த புத்தகத்தில்
பதுக்கப்பட்டிருக்கிறதோ !

எப்படியாகினும்
ஒரு மகிழ்ச்சியான தருணம்
கடந்து போய்விட்டதை
நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது
ஒரு வெடித்த பலூன்.

ஒரு வெடிச்சிரிப்பை
சட்டென்று நிறுத்துவது எப்படி?

-  மகரந்தன்

Sunday, July 5, 2015

சலிப்புற்ற போர்க்கால பொழுது

இணைக்க


சலிப்புற்ற போர்க்கால பொழுது

இருளும் தீயும்
நீண்டுகிடக்கும்
நெடிய பாதை அது.

இரவுப் பறவையின் இறக்கைகள்
கட்டுக்கடங்காத சப்தத்தை
எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

சப்பாத்துகள் கண்ணீரால்
நிரப்பப்பட்டிருக்கிறது.
கடிகாரம்-
ஓய்வெடுக்கப் போய்விட்டது.

தூக்கத்திலும் சலிப்புற்று
ஆடைகள் கிழிந்துபோயிற்று

ஆனால் எல்லைக் கோடுகளுக்கு
எதிரெதிரே உட்கார்ந்திருக்கும்
ஆயுதங்களுக்கிடையே பரிமாறப்படும்
ஒரு கப் சூடான தேநீரில் பறக்கும் ஆவி
நெம்புகோலாகிறது
எல்லைமீறுகிறது அன்பு.

பொறியில் அகப்பட்ட எலியைபோல்
குற்றவாளிக் கூண்டில்
நின்றுகொண்டிருக்கிறார்கள்
பொதுஜனங்கள்.

      - மகரந்தன்

Saturday, July 4, 2015

நேற்றைய தவறு

இணைக்க


நேற்றைய தவறு 



கண்கள் இரண்டும்
வேறுவேறு திசைகளைக் காட்ட
காதுகள்-
காததூரத்திற்கு அப்பால் கேட்கும்
எச்சரிக்கை ஒலியைக்
கேட்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

நாசி –
துவாரங்கள் தூர்ந்தது போன்று
செத்துக்கிடக்கிறது
வாய் –
வார்த்தைகளை பூட்டிக்கொண்டு
புன்னகையை
கேளிசெய்கிறது.

முகம் எண்கோணலாக
சுழிந்து கிடக்கிடக்கிறது.

ஒரு மார்பளவு புகைப்படத்தில்
இத்தனை ஒழுங்கீனங்கள் !

இருக்கட்டும்.
நேற்றைய தவறு
இன்றெப்படி சரியாகும் ? 

                      -  மகரந்தன்

Wednesday, October 22, 2014

அழகழகான புதுச்சேரி! - தி இந்து

இணைக்க
அழகழகான புதுச்சேரி! - தி இந்து







மக்கள்தொகைப் பெருக்கம், வளர்ச்சியின் கட்டாயம், பாகப்பிரிவினைகள், வர்த்தக நோக்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு, பண்பாட்டுச் சின்னங்களைப் பற்றிய புரிதல் இன்மை போன்றவை ஒரு பண்பாட்டு அமைப்பைச் சிதைக்கும் தன்மை கொண்டவை. இதற்கு பலியான நகரங்கள் பல. இந்தப் பட்டியலில் புதுச்சேரியின் கட்டிடக் கலையும் சேர்ந்துவிடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

சுவாரசியமான கலப்புக் கலாச்சார வரலாற்றைக் கொண்டது புதுச்சேரி. 1690-களின் தொடக்கத்தில் டச்சுக்காரர்கள் இங்கு வந்தபோது புதுச்சேரி கடலோடிகளின் வசிப்பிடமாக இருந்தது. புதுச்சேரி மேம்பாட்டுக்கான வளர்ச்சித் திட்டத்தையொட்டி, டச்சுக்காரர்கள் ஒரு வரைபடத்தைத் தயார்செய்தனர். நேர்நேரான தெரு அமைப்பைக் கொண்ட நகருக் கான அந்தத் திட்டத்தின்படி, உள்ளூர்த் தமிழர்களைப் பெரிய வாய்க்காலின் மேற்குப் பகுதியில் குடியமர்த்தத் திட்டமிட்டனர். மீண்டும், பிரெஞ்சுக்காரர்கள் வசம் புதுச்சேரி வந்தவுடன் அந்தத் திட்டத்தைப் பின்பற்றி நேர்நேரான சாலைகளை அமைத்திருக்கிறார்கள்.

தமிழ்க் குடியிருப்புகள்

ஆரம்பத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த அரசு சதுக்கத்தைச் சுற்றி (தற்போதைய பாரதி பூங்காப் பகுதியில்) பிரெஞ்சு நகர் உருவாக்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றிக் கம்பீரமான அரசுக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றை அடுத்து, இரு பக்கங்களிலும் அரசு அலுவலகங்களும் வீடுகளும் கொண்ட விரிவான பகுதிகள் வளரத் தொடங்கின. கடற்கரையை ஒட்டிய சாலையானது, சுங்கச்சாவடி, நீதிமன்றம், மேல் முறையீட்டு மன்றம் போன்ற முக்கிய கட்டிடங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பெரிய வாய்க்கால் - தமிழ்ப் பகுதியையும் பிரெஞ்சுப் பகுதியையும் பிரித்தது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் இரு பாலங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தில் பணிபுரிந்தோருக்காக நகரின் வடக்குப் பகுதியில் சிறு தமிழ்க் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது தெரிகிறது.

பொதுவாக, பிரெஞ்சுக் கட்டிடச் சுவர்கள் இரண்டடி அகலமும் 14 அடி உயரமும் கொண்டவை. இவை, செங்கற்களால் சுண்ணாம்பு கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. துத்திப்பட்டு என்னும் இடத்திலுள்ள சுண்ணாம்புக் கற்களிலிருந்தும், கடல் கிளிஞ்சல்களைச் சுட்டும் சுண்ணாம்பைத் தயாரித்துள்ளனர். இத்தகைய சுண்ணாம்பை மணலுடன் கலக்கக் கலவை நிலையங்கள் இருந்துள்ளன. மர வேலைகளுக்கு பர்மா தேக்கு உபயோகிக்கப் பட்டுள்ளது.

தமிழ்ப் பகுதி வீதிகளும் பிரெஞ்சுப் பகுதி வீதிகளும் வேறுவேறான அமைப்புக்களைக் கொண்டவை. பிரெஞ்சுப் பகுதி வீதிகளின் வீடுகள் தனித்தனியாகவும் பெரியதாகவும், உயரமான சுற்றுச்சுவர், திறந்தவெளித் தோட்டம், அலங்காரமான நுழைவு வாயில், வளைவுகளுடன் கூடிய வராந்தா, உயரமான சன்னல்கள், மரத்தாலான பால்கனிகள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்திருப்பதைக் காணலாம். தமிழ்ப் பகுதித் தெருக்களைப் பொறுத்த வரை, முக்கிய அம்சங்களாக விளங்குபவை வாயில் தாழ்வாரமும் திண்ணையுமே.

முற்றத்தின் முக்கியத்துவம்

வீதியையும் வீட்டையும் இணைக்கும் திண்ணைப் பகுதியிலுள்ள - வேலைப்பாடு மிகுந்த வாசற்கதவைக் கடந்ததும் ஒரு குறுகிய நடைப்பகுதி (ரேழி) வழியே வீட்டின் மையப்பகுதியான முற்றத்தை அடையலாம். முற்றம் பழங்காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்து

வரும் ஓர் அமைப்பு. பிரம்மஸ்தானம் என்று அழைக் கப்படும் இந்த இடம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் எனும் ஐந்து இயற்கைக் கூறு களையும் வீட்டின் மையப் பகுதியுடன் இணைக்க உதவுகிறது. வீடு இயற்கை வெளிச்சத்துடன் காற்றோட்டமான அமைப்புடன் விளங்க இந்த முற்றமே காரணம்.

தொடர்ச்சியான தாழ்வாரங்கள் மற்றும் பிலாஸ்டர், கோர்னேசு, கைப்பிடிச்சுவர் போன்ற பிற அம்சங்களும் இவற்றின் ஒருபடித்தான தன்மையும் தெருவுக்கு ஒரே சீரான அழகை அளிப்பதைக் காண முடியும். தமிழ் வீடுகளில் சமதளக்கூரை, சாய்வான ஓட்டுக்கூரை இரண்டும் கலந்து அமைக்கப்பட்டுள்ளன. இருதளமாக அமைந்த தமிழ் வீடுகளில் கீழ்ப் பகுதி தமிழ்க் கலை அம்சங்களுடனும், மாடிப் பகுதி பிரெஞ்சுக் கலை அம்சங்களுடனும் விளங்குகின்றன.

தனிச்சிறப்பை இழக்கலாமா?

அடுத்தடுத்துள்ள இத்தகைய இரு வேறுபட்ட பாணிகள் ஒன்றை ஒன்று பாதித்ததன் விளைவாக, இங்குள்ள கட்டிடங்கள் இரண்டு கலை அம்சங்களையும் பிரதிபலிக்கும் கூட்டுப் பண்பாட்டு வடிவமாக ‘புதுச்சேரிப் பாணி’ என்கிற ஒரு தனி இலக்கணத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். புதுச்சேரியின் தனிச்சிறப்பே மாறுபட்ட தமிழ் மற்றும் பிரெஞ்சு அமைப்புக்கள் ஒன்றோடொன்று ஒட்டி அருகருகே அமைந்திருப்பதுதான். எனினும், சமீபகாலமாக புதுச்சேரி தனது தனிச் சிறப்பையும் வித்தியாசமான பிரெஞ்சு-தமிழ் கூட்டுப் பண்பாட்டு அமைப்பையும் வேகமாக இழந்துவருவதுதான் வருத்தமளிக்கிறது.

- மகரந்தன்

தொடர்புக்கு: maharandan@gmail.com

Thursday, January 10, 2013

இது உங்கள் கதையல்ல

இணைக்க

இது உங்கள் கதையல்ல




எப்போதும் -
தவளையாக மாற
எண்ணம் கொண்டிருக்கும்
தெருநாய் ஒன்று
இங்கு படுத்திருக்கிறது.

நாயாகக் குரைப்பதில்
துளியும் விருப்பமில்லை.
தவளையாய்
குட்டையில் ஊறவும்
விருப்பமில்லை.

என்றாலும்-
தவளைபோல்
குரலெழுப்பிக்கொண்டே
படுத்திருக்கிறது
அந்த மனநாய்.

                               - மகரந்தன்

Wednesday, January 9, 2013

மரங்களின் மரணம்

இணைக்க






மீண்டும் அவர்கள் வந்திருக்கிறார்கள்
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது
இம்முறை-
அவர்களோடு போகவே
விருப்பப்படுகிறேன்.

பணக்கார பயணிகள்
வந்து போகுமிடம்;
என் வசிப்பிடம்.

இங்கு-
ஒரு சமயம்
உயரமாக வளர்ந்த
அடர்ந்த பசுங்காடுகள் இருந்தன.

மலை முகடுகளிலும்
ஆற்றின் திவளைகளிலும்
யானைத் தந்தத்தின் நிறத்தில் 
விரிந்து கிடக்கும் மணற் செதில்களில்
மின்னும் சூரிய ஒளியில்
ஓர் ஆன்மீக அமைதி தவழும்.

பரிசுத்தமான
தென்றலின் ஆட்சி
இங்கு குடிகொண்டிருக்கும்.

அருகில் இருந்த நகரம்
சிறியதாய் இருந்தபோது
சில மரம் வெட்டிகள் வந்து போனார்கள்.
பின்னும் 
பலமுறை வந்தார்கள்
நகரம் பெருநகரமாகிவிட்டது.

விலைமதிப்பற்ற மரங்களுக்காக
இப்போது-
மீண்டும் வந்திருக்கிறார்கள்;
கையில் ஒரு பட்டியலோடு.
அதில் என் பெயரும் இருக்கிறது.

இம்முறை-
அவர்களோடு பயணிக்கவே விரும்புகிறேன்.
எனக்கு முன்னால்
இங்கிருந்து குடிபெயர்ந்த
சக நண்பர்களைக் காண
ஆவலாய் இருக்கிறது.

இனி இங்கே-
மலைகளும் ஆறுகளும்
மணல் திட்டுகளும் இருக்கலாம்.

ஆனால்-
பருத்து திமிர்த்த அந்த கறுத்த மரம். . .
நெஞ்சை நிமிர்த்தி வீராப்பு பேசும்
அந்த தேக்கு மரம். . . 
காற்றுக்கு வாசனை பூசிவிடும்
அந்த சந்தன மரம்....
ஆற்று நீரில் அடிக்கடி முகம் பார்க்கும்
அந்த ரோஸ் மரம்.....

இன்னும்.... இன்னும்...
அந்த பரிசுத்த தென்றலின் ஆட்சி...... ?


                                               - மகரந்தன்

Tuesday, January 8, 2013

உன் ஆழ்மனத்தினுள் ஒரு நாள்

இணைக்க


உன் ஆழ்மனத்தினுள்
ஒரு நாளைக் கழிக்க விரும்புகிறேன்.

நான் -
என்ன கண்டுபிடிக்கப் போகிறேன் என்று
யாருக்குத் தெரியும் ?

உனது பிரகாசமான எதிர்காலத்தையா
உனது இரகசிய அச்சத்தையா
உனது இருட்டு ஆசைகளையா
உனது பயங்கர கனவுகளையா
அல்லது
உனது சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கும்
உனது கோரமுகத்தையா ?

அநேகமாய்
என்னிடமிருந்து நீ திருடிய
ஒரு கருப்பொருளை மீட்டெடுக்கலாம்
அல்லது
உன் ஆழ்மன எண்ணங்களில்
சில அம்பலப்படலாம்.

இவற்றையெல்லாம்விட
ஆண்டு முழுவதும்
என்னைப்பற்றி
உண்மையிலேயே நினைத்தது என்ன
என்பதைப் பற்றி
தெரிந்துகொள்ளலாம்.

ஆகவே - 
உன் ஆழ்மனத்தினுள்
ஒரு நாளைக் கழிக்க விரும்புகிறேன்
என் எதிர்காலத்தைத் திட்டமிட.

- மகரந்தன்.

Monday, January 7, 2013

முதுகெலும்பற்றவன்

இணைக்க
தானாகவே மூளை சுவாசிக்க
தானாகவே இதயம் துடிக்க
துடுப்பு இல்லாமல் நீந்துகிறேன்.

எல்லை கடந்து
இலக்கு இன்றி
நடந்து கொண்டிருக்கிறேன்
ஒரு பேரழிவின் நடுவில்.

ஒரு பூனையின்
கூரிய நகமுனையில் சிக்கிய
நூல் கண்டைப்போல
ஒரு கட்டுக்கதையின்
கூர் வெளிச்ச முனையில்
சிக்குண்டு கிடக்கிறது எதிர்காலம்.

உள்வாங்கிய வயிற்றில்
வலியின் மிச்சம்
இன்னும் இருக்கிறது.

தலை சுற்றுகிறது
மூளை வேலைசெய்வதால்.

வாழ்வின் எச்சம்
குப்பையில் வீழ்கிறது.

முதுகெலும்பை அழுத்திக்கொண்டு
முதுகின்மீது-
ஒரு கரடி உட்கார்ந்திருப்பது போல் உணர்வு.

முதுகெலும்பா. . . ?
அதுதான் எனக்கில்லையே !

                                                                    - மகரந்தன்