Tuesday, July 1, 2008

முரண்களின் உயிர்ப்பு

இணைக்க
இன்று காலை
அவளைப் பார்த்தேன்

பனியில் குளித்த
அதிகாலை ரோஜாச் செடிபோல்
இருந்தாள்.

அவள் வெட்கத்தோடும்
புன்னகையோடும்
என்னைப் பார்த்தாள்.
அவளின் நேர்கொண்ட நோக்கு
நேர்மையானது.

அவள் ஒற்றைக் கூந்தலில்இருந்த ரோஜா
கீழே வீழ்ந்தது.

சட்டென அதை
எடுக்கக் குனிந்தபோதுதான்
கவனித்தேன்
அவளுக்கு ஒரு கால் இல்லை.
கட்டைக் கால்.

என்னைக்
கடக்கும்போது
அழியாத அந்தப் புன்னகையை
உதிர்த்துப் போனாள்.
அது அர்த்தமுள்ளது.

பெருங்குரலெத்து
நான் புலம்பித் தீர்க்கும்போதெல்லாம்
ஓ. . . என் பேரண்டமே !
என்னை மன்னித்துவிடு
எனக்கு இரண்டு கால்கள் உள்ளன.
உலகம் என்னுடையது.


பூங்கொத்து வாங்க
நின்றேன்.

கடைக்கார இளைஞன்
வசீகரமானவனாக இருந்தான்.
அவனது புன்னகை
தன்னம்பிக்கைக்கு புதிய முகவரி.

"நீங்கள் சற்று தாமதமாய் வந்திருந்தால்
உங்கள் பொல்லாப்புக்கு
ஆளாகியிருப்பேன்.
இதுதான் கடைசி"
என்று தந்தான்.
அவன் வார்த்தைகளில்
மாய வித்தை இருந்தது.
இன்னும் கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிருக்கலாம் என்றும்
யாருக்கும் தோன்றும்.


"நன்றி" சொல்லி
நகரும் போது
"நான்தான் உங்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்.
உங்களைப் போன்றவர்களோடு
பேசுவதே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
பாருங்கள்
நான் பார்வையற்றவன்"

நெடுங்குரலெடுத்து
நான் ஏங்கியழும்போது
ஓ. . . என் பேரண்டமே !
என்னை மன்னித்துவிடு
எனக்கு இரண்டு கண்கள் உள்ளன.
உலகம் என்னுடையது.

வீதியில் இறங்கி
நடந்து கொண்டிருந்தபோது
நீலக்கண்களோடு
ஒரு சிறுவனைக் கண்டேன்.

அவன்
பிற சிறுவர்கள் விளையாடுவதை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நிமிடம் நின்று
அவனிடம் கேட்டேன்
"நீ ஏன் அவர்களோடு சேர்ந்து
விளையாடக்கூடாது"

ஒரு வார்த்தையுமின்றி
அவன்
அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான்
பிறகுதான் தெரிந்தது
அவனால்
"கேட்க இயலாது" என்று.
கேட்க இயலாதபோதும்
அவன் பார்வையில்
ஆழ்ந்த தெளிவு இருந்தது.

கனத்த குரலெடுத்து கண்ணீர் விட்டு
குறைகளைச் சொல்லி
நான் அழும்போதெல்லாம்
ஓ. . . என் பேரண்டமே !
என்னை மன்னித்துவிடு
எனக்கு இரண்டு காதுகள் உள்ளன.
உலகம் என்னுடையது.

முரண்களில் உயிர்க்கிறது வாழ்க்கை.

- மகரந்தன்

No comments: