Tuesday, August 4, 2009

குப்பை வண்டி

இணைக்க

குப்பை வண்டிக்குள்ளும்
எவ்வளவோ குப்பைகள்

வலியச் சென்று
பிறர் குப்பைகளை
வாங்கிக் கொண்டது

பிறர்
வலிய வந்து
தன் குப்பைகளைக்
கொட்டிவிட்டுச் சென்றனர்

"சுமை கனத்தது"
குப்பை வண்டி
தள்ளாடியது
கொடுத்தவரும்
கொட்டிவிட்டுச் சென்றவரும்
சுமக்க வேண்டியது
நீதான் என்று
தள்ளிவிட்டுச் சென்றனர்

பாவம்
தள்ளாடித் தள்ளாடி
நடந்து கொண்டிருக்கிறது
மனித வண்டி.

- மகரந்தன்

Saturday, August 1, 2009

தவளைக் கூச்சல்

இணைக்க

இராமனுக்காய்த் தவமிருந்தேன்
பலனில்லை.
அவன் தம்பியாவது ?
அதற்கும் வழியில்லை.

சரி
வேறு எவனாவது ?
..... .... .... .... .....

பொறுத்துப் பார்த்தேன்
வேறு வழி தெரியவில்லை
பக்கத்து வீட்டு இராவணனைக்
கடத்திவிட்டேன்.

அங்கே என்ன
தவளைக் கூச்சல்
என் கற்பைப் பற்றி.

- மகரந்தன்

Friday, July 31, 2009

பூனைப் புராணம்

இணைக்க

எலிகளுக்கு எப்போதும்
பூனைப் புராணம்தான்

காதோடு காதாக
எலிகள் பேசிக்கொண்டன
"பூனைக்கு மணிகட்ட வேண்டும்"

யார் கட்டுவது?
அவைகளுக்குள் குழப்பம்

கூடவே இல்லை
உடைந்து உடைந்து
அணிகள் தோன்றின

ஒத்துவந்தவை
கூட்டணி வைத்தன.
தனித்து நின்றவை
சோரம் போயின

அவைகளுக்குள்ளும்
அடிதடிச் சண்டை
மணிகட்டும் விஷேயம்
மறந்தே போயின

வந்து சேர்ந்தன
வாக்குப் பெட்டிகள்

எதிரே வந்த
பூனையைக் கண்டதும்
எலிகள் போட்டது
வாக்குகள் அல்ல
புழுக்கைகள்

எலிகளுக்கு இன்னமும்
பூனைப் புராணம்தான்

வீட்டு முதலாளி சென்னார்
"இன்னும் இரண்டு
பூனைகள் வளர்த்தால் தேவலை
எலிகளின் தொல்லை
தாங்க முடியவில்லை"

- மகரந்தன்

Thursday, July 30, 2009

பார்வைகள்

இணைக்க

கல்லூரி போகப் படியிறங்கினால்
அங்குதான் போகின்றேனா
என்ற
பக்கத்து வீட்டு மாமியின்
போலீஸ் பார்வை

வீதியில் இறங்கி
நடக்க ஆரம்பித்தால்
காலிப் பயல்களின்
விசில் பார்வை

வயோதிகனிடத்தில்
வாலிபப் பார்வை

வகுப்பறையில்
ஆசிரியரின்
கேள்விப் பார்வை
சக மாணவர்களின்
கேலிப் பார்வை

பஸ்ஸிற்கு நிற்கையில்
ரோமியோக்களின்
காதல் பார்வை

பஸ்ஸிற்குள் எத்தனையோ
உரசல் பார்வை
தனித்து நடந்தால்
தனியே அழைக்கும்
"சிகப்பு" பார்வை

வேட்டைக்கு தப்பி
வீட்டுக்கு தந்தால்
என் புத்தகங்களில்
கடிதம் தேடும்
உன்னிடத்தில்
சந்தேகப் பார்வை

நீயுமா அம்மா . . . .

- மகரந்தன்

Friday, July 24, 2009

மண்குதிரை

இணைக்க

வர்ண ஜொலிப்பு
வாண வேடிக்கைகளோடு
பிரதிஷ்டை செய்யப்பட்டது
மண்குதிரை.

இது...
காவல் தெய்வங்களின்
புறப்பாட்டிற்கானது.
இதன்மீது ஏறித்தான்
கூட்டணியில் தெய்வங்கள்
வேட்டைக்குப் போகும்
புலிகளைவிடுத்து
எலிகளை வேட்டையாடும்.

வேட்டைப் பொருள்களாக
பத்மினிகளின் கற்போ
அப்பாவிகளின் கண்ணீரோ
சாபமோ கிடைக்கும்

கடமையை மறந்த
காவல் தெய்வங்கள்
தங்களுக்குள் இட்டுக்கொள்ளும்
குடுமிச் சண்டையில்
குதிரையின் பாகங்கள்
உதிர்ந்த ரோமங்களாகும்.

தெய்வங்கள்
பதவி இழக்கும்.

மூடக் குயவர்கள்
மறுபடியும் ஒன்றுகூடி
குதிரை செய்வார்கள்.

Thursday, July 10, 2008

கனவுகள் கலையட்டும்

இணைக்க

அம்மா. . .
அன்று பாடிய தாலாட்டை
இன்றும் பாடு!

என்
கணங்களின் யுகங்களை
கனவுத் தூளியில்
தூங்கச் செய்த
அந்தத் தாலாட்டை
இன்றும் பாடு !

வாரணமாயிரம் சூழ
இந்திரன் போலொரு
இராஜகுமாரன் வந்தென்
கைத்தலம் பற்றுவான்;

வைரமணி மாலைகள் வீழ
முத்துப்பந்தலின் கீழ்
என் திருமணம் நிகழும்;

கைகள் சிவக்க
தந்தையும் தமையனும்
வரிசைகள் வழங்க
ஊர் மக்கள் வாழ்த்தொலி
விண்ணைப் பிளக்கும்;

என் தாலிக்கு சீர் சேர்க்க
வெள்ளிமணி பூட்டிய வண்டியில்
வண்டி நிறைய சீர்களோடு
தாய்மாமன் வருவான்;
என் குழந்தைக்குத்
தங்கத்தில் தொட்டில் தருவான்
என்றெல்லாம் பாடினாயே. . .

உன் பாட்டில் கேட்டதைப் போல்
இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும்
நான் கண்டதில்லையே அம்மா . . .

அந்தப் பிஞ்சு வயதில்
என் கண்களுக்கு
கனவுகளை மட்டுமே
சொல்லிக்கொடுத்துவிட்டாயே !


இன்று. . .
முதிர்கன்னி என்கிறார்கள்.
கண்ணீர் கோடுகள்
சிறைக் கம்பிகளாகிவிட்டன.
உடலைப்போலவே
உள்ளமும் சோர்ந்துவிட்டது.

அம்மா. . .
அன்று பாடிய தாலாட்டை
இன்றும் பாடு !

ஆனால் . . .
இன்னொரு தலைமுறையை
கனவுகளிலேயே
காலந்தள்ள விடாமல்
நீ வாழ்ந்ததைப் பாடு !
எதார்த்த வாழ்க்கையைப் பாடு !

- மகரந்தன்

அது ஒரு புனிதப் பொழுது

இணைக்க
அது ஒரு புனிதப் பொழுது

சூரியன்
பொழுதின் மடியில்
தலை சாய்கிறான்
நான் உன் மடியில்
தலை வைத்திருக்கிறேன்.

வானம்
தேசத்தின் நெருக்கடி நிலையை
நினைவூட்டுகிறது.
"மழை வருமா?" என்கிறேன் நான்.
"சாரலே அடிக்கிறது" என்கிறாய்
ஆம்!
உன் கண்களில் மின்னல்.

நிர்வாணத்தைக்
குடைகளாக்குகின்றோம்
நம்முள்
மழையடித்து ஓய்கிறது.

அந்த அந்திக்கும்
வெட்கம் போலும்
இருட்டு முக்காட்டை
இழுத்துப் போர்த்திக்கொள்கிறது.

அது ஒரு புனிதப் பொழுது.

- மகரந்தன்.

கறுப்பு

இணைக்க

உன் தோலும்
என் தோலும்
ஒரே நிறம்தான்
"கறுப்பு"

உன் தொழிலும்
என் தொழிலும்
ஒரே மாதிரிதான்
"அடிமைத் தொழில்"

உன் ஊருக்கும்
என் ஊருக்கும்
ஒரே வித்தியாசம்தான்
"பறைச் சேரி"
"பள்ளிச் சேரி"

தின்ன இலையில்
பீ பேணவன் நீ என்றால்
அதற்கும் அஞ்சி
நகர்ந்து உட்கார்ந்தவன்
நான்

நகர்ந்து உட்கார்ந்தவனை
அழித்தொழிப்பேன் என்றால்
அதையே
தின்னக் கொடுத்தவனை
என்ன செய்வாய்?

காற்றுக்கும் தெரியாமல்
கழுவிக் கொள்வாயோ?

- மகரந்தன்

Saturday, July 5, 2008

நிழல்கள்

இணைக்க
ஓயாது வந்துபோகும்
இந்தக் கொடுங்கனவிலிருந்து
எப்படித் தப்புவது?

- இங்கே
நிழல்களின் நிலத்தில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
இங்கே அங்கேயென
ஏகப்பட்ட குரல்கள்
உருவமற்று.

என் குரலை மட்டும்
ஒருவரும் செவிமடுக்கவில்லை.
அந்தக் குரல்கள் மட்டும்
அத்தனை விளக்கமாய்
எனக்குக் கேட்கின்றன.
என் குரல் மட்டும் எவருக்கும்
எட்டவில்லையே !

பழகிய
அதன் பெயரையும் சொல்லித்தான்
ஓலமிட்டு அழைக்கிறேன்.

பிறகு -
நினைவுகளனைத்தும்
பின்னோக்கி நகர . . . நகர. .
மூளையின் பெருவலி
குரல்களின் சத்தத்தை
அதிகப்படுத்திக் கொண்டே
இருக்கிறது.

நிஜங்களைத் தொலைத்த
கொடுங்குரல்களின் ஊடாக
உண்மையைக் காண எங்கே போவேன்?
எப்படிக் காண்பேன்?

தேடித்தேடித் தீர்ந்த பின்னர்
இங்கே
மறுபடியும்
நிழல்களின் நிலத்தில்
நடந்து கொண்டிருக்கிறேன்
போகும் வழிதெரியாது.

அனைத்துக் குரல்களும்
ஆள் பிடிக்கும் ஆசையில்
தனித்தனியாய் அலைந்து கொண்டிருக்கின்றன
எந்த ஒரு பிடிப்புமின்றி.

- மகரந்தன்