Monday, March 8, 2010

மாதிரி விடைத்தாள்

இணைக்க
மாதிரி விடைத்தாள் 


இயலாமையால் பூக்கும்
சிறு புன்னகையை
மழித்துப் போடுகிறது 
சவரக் கண்ணாடி.

வெளிதாண்டிக் குதிக்கின்றன 
கரகோஷமும் 
கைத்தட்டலும் 
தூக்கம் விழித்து எழுந்திரா 
கிசுகிசுபொதி பறக்கும் 
பாழ்நிலத்தில்.

தாழ்ப்பாளையும் 
பூட்டையும் இணைக்கும் 
கதவின்மீது வந்தமரும்
வண்ணத்துப் பூச்சியை
அழைத்துப் பேசத்தொடங்கினேன் 
"... ... ... ... ... ... ... ... 
என் கேள்விக்கு இன்னும் 
பதில் இல்லையே. . . "


"சந்தோஷமாக 
பயமற்றுத்தான் திரிகிறேன்" 

தெளியும் ஆர்வத்தில்
நீளும் என் விரலின் 
நடுக்கத்தில் 
படபடத்துப் போயிற்று 
பட்டாம்பூச்சி.

நாமிருக்கும் நிலை உணர்ந்து 
நம்மைத் தேர்வு செய்கின்றன 
பொய்கள்.

- மகரந்தன்   
   

No comments: