Wednesday, October 7, 2009

மூன்றாம் வருகை

இணைக்க
உன் பெயரெழுதிய 
பதாகையை உயர்த்திப்பிடித்தபடி 
ஊளையிடும் 
நரிகளுக்கு அஞ்சி 
ஒரு மயில்மீதேறிப் போனது 
உயிர் கொளுத்துமொரு 
அந்திப்பொழுது.  


ஒரு காவியக் கவிதையை 
மீட்டெடுக்கும் தருணம் 
நகரமெங்கும் 
நிர்வாணம் தரித்து 
மதச்சின்னமாகிப்போன 
கிறித்துவம் அறையப்பட்ட மரங்களை 
வெட்டிச் சாய்க்கிறது 
பொறியில் அடைக்கப்பட்ட 
ஒற்றைக் காதலை 
காவல் காக்கும் ஒட்டுரகப் பூனை.  


எரிவதும் 
கனன்று புகைவதுமான 
கோபத்தை 
மேலும் மேலும் 
ஆழமும் விசாலமுமாக்கி 
மேலும் வேகும்படி செய்கிறது 
கந்தகத்தீ கொளுத்தும் 
ஆரக்கால் தூபம்.  


ஓடுபாதையின் 
ஒழுக்கக் கோட்டிற்குள் 
ஓடி ஓய்வெடுக்கிறது 
கூர்மதியுடன் 
அர்த்தமாய் வம்பளந்த 
ஞானத்தின் நிச்சலனம் 
சுயத்தின் விளிம்பில் சயனித்தபடி.  


அத்தனை- 
அர்த்தமான வம்பளப்பில் 
எதுவுமே மிச்சமில்லாத 
துருபிடித்த மோனத்தின்மீது 
பீலியின் இறகொன்று 
மீண்டும் வந்தமரும்போது 
எத்தனை இனிமையாய் இருக்கிறது 
இதயம் பேசும் பொய்.  


- மகரந்தன்

1 comment:

நேசமித்ரன் said...

அருமையான மொழி வளம் உங்களுக்கு

அருமை